செவ்வாய், 20 ஏப்ரல், 2010

யு.ஏ.யில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீஸ் துறையில் பணியாற்றிய தனது கணவரை,பெண் ஒருவர் தனது கள்ளக் காதலர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த சம்பவம் 2003-ம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரித்து வந்த நீதிமன்றம் 4பேருக்கும் இவ்வழக்கில் மரணதண்டனை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் மரணதண்டனையை உறுதி செய்தது.

கொலை நடந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மரணதண்டனை பெறும் முதல் பெண் இவர்தான்.

இஸ்லாமிய சட்டப்படி, மரணதண்டனை குற்றவாளிகளை பாதிக்கப்பட்டோரின் நெருங்கிய உறவினர் மன்னித்துவிட்டால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்படும்.

ஆனால், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளையும் மன்னிக்க முடியாது; அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கொலையுண்டவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதனால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என ஐக்கிய அரபு அமீரக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: