வெள்ளி, 26 நவம்பர், 2010

தொன்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி:

 அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி இப்பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை துவங்கவிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் வாஷிங்டன் உள்ளிட்ட கப்பல்கள் கொரிய கடற்பகுதியை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கின்றன.
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையே நேற்று முன்தினம் நடந்த பீரங்கித் தாக்குதல் இப்பிராந்தியத்தில் போர்சூழலை உருவாக்கியது. இத்தாக்குதலில் இரண்டு ராணுவத்தினரும், இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே ராஜினாமாச் செய்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங்குக்கு பதிலாக முன்னாள் கூட்டுப்படை கட்டளைப் பிரிவு பிரதிநிதி தலைமை அதிகாரியாக பணியாற்றிய லீஹீவோன் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

யோன்பியோங் தீவில் வடகொரியா நடத்திய தாக்குதலுக்கு உடனடியாக பதிலடிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங் ராஜினாமாச் செய்திருந்தார்.

வடகொரியாவுக்கெதிரான போர் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ள முட்டாள்தனமான முடிவு பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்வதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கெ.சி.என்.எ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் யோன்பியோங் தீவில் நேற்றும் பீரங்கி சப்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக் குறித்து விசாரித்து வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் எல்லைக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பின் சப்தமாக இது இருக்கலாம் என பி.பி.சி கூறுகிறது. தென்கொரியாவின் போர் பிரியர்கள் கோபத்தை தூண்டினால் இனிமேலும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைத்-ஈராக் எல்லை முடிவுக்கு வந்தது

ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைத் தகராறுக்கு பரிகாரம் ஏற்பட்டுள்ளது.தகராறு தொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதாக குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரப் வேர்ல்ட் துறை தலைவர் ஜாஸிம் அல் முபாரக்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் எல்லையில் 500 மீட்டர் இடத்தை ஆளில்லா நிலமாக ஒதுக்கும். ஈராக்கி விவசாயிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அல்ஸெயாஸாஹ் தின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லையில் வசிக்கும் விவசாயிகளுக்காக ஈராக்கின் உள்புறம் குவைத் 50 வீடுகளை நிர்மாணித்து வழங்கும். இரு நாடுகளும் ஒதுக்கும் 500 மீட்டர் இடத்தில் எல்லை போலீசாரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் கமிஷனுகளுக்கிடையே சமீபத்தில் நடந்த சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 1993 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இரு நாடுகளின் எல்லையை நிர்ணயித்திருந்தது.

ஈராக் கைப்பற்றிய சில பிரதேசங்கள் குவைத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இருநாடுகளும் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததால் பிரச்சனைகள் நிலவி வந்தன.

விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் ரகசிய ஆவணங்கள்: பீதியில் அமெரிக்கா



வாஷிங்டன்,நவ.27:விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.