திங்கள், 3 மே, 2010

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள்

பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறையில் முன்பு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, தாங்கள் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிச் செய்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதானா இரகசிய சித்ரவதைச் சிறை
முதானா விமானதளத்திலிருந்த இந்த இரகசிய சித்ரவதைச் சிறை தற்போது மூடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மாத முற்பகுதி வரை இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்து வந்திருந்தனர்.

"எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்"என்று இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்.
இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் ஒத்துப் போகின்றன.

இந்நிலையில் ஈராக்கில் இரகசிய சிறைச்சாலைகள் உள்ளன என்பதையும், ஈராக்கின் சிறைகளில் சித்ரவதை பரவலாக நடந்து வருகிறது என்பதையும் ஈராக்கிய அரசாங்கம் முற்றிலுமாக மறுக்கிறது.

ஆனால் முத்தானா இரகசிய சிறைச்சாலையில் சித்ரவதை என்பது 'வழமையாகவும், வழிமுறை வகுக்கப்பட்டும்' நடந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

கருத்துகள் இல்லை: