புதன், 28 ஏப்ரல், 2010

ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான கால எல்லை 2042 வரை நீடிப்பு

உக்ரைன் பாராளுமன்றத்துக்குள் கூழ் முட்டை, பெற்றோல் குண்டுகள் வீசி எதிர்க்கட்சிகள் ரகளை

உக்ரைன் பாராளுமன்றம் ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான காலத்தை 25 ஆண்டுவரை நீடிக்க அனுமதி வழங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது இதற்கான அனுமதியை பாராளுமன்றம் வழங்கியது. இதன் பிரகாரம் 2042ம் ஆண்டுவரை உக்ரைனில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் இயங்கவுள்ளது.

உக்ரைன் பிரதமர் யனுகோவிச், ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் ஆகியோருக்கிடையே இது தொடர்பான உடன்படிக்கைகள் ஏப்ரல் 21ம் திகதி கைச்சாத்திடப்பட்டன. ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் பெறும் எரிவாயுக்களுக்கு முப்பது வீத விலைக் கழிவை வழங்குவது என ரஷ்யா உத்தரவாதம் வழங்கியதையடுத்து கடற்படைக் காலத்துக்கான கால எல்லையை உக்ரைன் பாராளுமன்றம் நீடித்தது. 236 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டது.

எனினும் இதைச் சட்டமாக்க இன்னும் பத்து எம்.பி.க்களின் ஆதரவுகள் தேவையாயுள்ளன. இது குறித்துப் பிரதமர் யனுகோவிச் கூறியதாவது, இதை மாற்றம் செய்ய முடியாது. குறைந்த விலையில் எரிவாயுவை பெற இதைச் செய்தோம். குறைந்த விலையில் எரிவாயுவை பெறுவதென்பது உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தைப் போன்றதென்றார்.

யனுகோவிச் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்தார். 2010ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்துக்கென 12 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணயத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் பிரதமர் யனுகோவிச் எதிர்பார்க்கின்றார்.

உக்ரைன் பாராளுமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று வன்முறைகளில் ஈடுபட்டனர். கூழ் முட்டைகள், பெற்றோல் குண்டுகளை பாராளுமன்றத்துக்குள் எரிந்தனர்.

பாராளுமன்றம் எங்கும் புகை மண்டலமாகவும் கூழ் முட்டையாகவும் காணப்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி பெருந்தொகையான கூழ் முட்டைகள் எரியப்பட்டன. இதனால் குடையைப் பிடித்தவாறு சபாநாயகர் ஆசனத்தை நோக்கி வந்தார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி வேட்பாளருமான டைமோ கொன்கோ கூறுகையில், உக்ரைன் கறுப்புக் பக்கத்துக்குச் சென்றுவிட்டது.

இது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அவமானம் எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சியை பொறுத்தவரை 2017ம் ஆண்டுவரைக்கும். இக்கால எல்லை நீடிக்கப்படுவதையே விரும்புகின்றனர். உக்ரைன் கொடிகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்தனர். படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் அரசாங்கம் விழிப்பாக இருந்தது.

கருத்துகள் இல்லை: