புதன், 28 ஏப்ரல், 2010

காந்தஹாரில் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது.

வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை: