வெள்ளி, 7 மே, 2010

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு

நியூயார்க்கில் அஹமதி நிஜாத்
நியூயார்க்:ஐ.நா.வின் மேலதிக தடைகள் ஈரானைத் தடுத்து நிறுத்தாதென அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியூயார்க்கில் 90 நிமிட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அஹமதி நிஜாத் 'புதிய தடைகள் விதிக்கப்படுமானால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மீண்டும் ஒருபோதும் சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ஒபாமாவின் உறுதிமொழிகள் தொடர்பில் ஏமாற்றம் வெளியிட்ட அஹமதி நிஜாத் முந்தைய அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கையை கைவிடப் போவதாக ஒபாமா வழங்கிய உறுதிமொழிகளை நாம் வரவேற்றிருந்தோம்.

ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; 'தடைகளால் ஈரானை நிறுத்த முடியாது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை ஈரான் பெற்றிருக்கிறது.

நான் தடைகளை வரவேற்காத அதேவேளை அதற்குப் பயப்படவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அணு நிகழ்ச்சித் திட்டத்திற்கெதிராக நான்காவது சுற்றுத் தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்காவும் ஏனைய ஐந்து வல்லரசு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. அடுத்த சில வாரங்களுக்குள் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்படும் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வரும் ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் சக்தி தேவைக்கானது கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை: