ஞாயிறு, 9 மே, 2010

ஈரான் ஏற்பாடு செய்த விருந்தில் அமெரிக்கா பங்கெடுத்தது


ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாகயிருக்கும் 15 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்ஷஹர் முத்தகி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரதிநிதியும் பங்கேற்றார்.

சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்தை காரணம் கூறி அதிக தடையை ஈரானின் மீது விதிக்க முயற்சி எடுத்துவரும் எதிரி நாடான அமெரிக்கா இவ்விருந்தில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இரண்டு மணிநேரம் நீண்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரல்லாத நாடுகளான போஸ்னியா, ஆஸ்திரியா, பிரேசில், லெபனான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா, ஹெர்சகோவினா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஐ.நாவின் சீன தூதர் லீ பாஇடோங், ஜப்பான் தூதர் யூகியோ தகாஷு, அமெரிக்க துணை தூதர் அலீஜ் ஆண்ட்ரோ வோல்ஃப் ஆகிய நிரந்தர பாதுகாவுன்சில் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மிக நன்றாக இருந்ததாக அமெரிக்க பிரதிநிதி விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு தெரிவித்தார். பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தவில்லை என்றும், பொதுவான விஷயங்களைக் குறித்து பேசியதாகவும் ஜப்பான் பிரதிநிதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அணு ஆயுதத்தை கைவசம் வைத்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாத அமெரிக்காவின் நடவடிக்கையை ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: