வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால்... - அஹ்மத் நஜாத் எச்சரிக்கை

டெஹ்ரான்,டிச.4:ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரண்டு ஈரான் அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இதுக்குறித்து தெரிவித்துள்ளார் நஜாத்.


அல்லாஹ்வை சாட்சியாக வைத்து கூறுகிறேன், இனியொரு தாக்குதல் நடந்தால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் என நஜாத் வடக்கு ஈரானில் தெரிவித்துள்ளார்.

டாக்டர்.மாஜித் ஷஹரியாரி, பேராசிரியர்.ஃபரீதியூன் அப்பாஸி ஆகியோரை அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வெடிக்குண்டை பொருத்தி வெடிக்கவைத்து கொலைச் செய்தனர்.

2007 ஆம் ஆண்டு ஐ.நா நிறைவேற்றிய ஈரானுக்கெதிரான தீர்மானத்தில் அப்பாஸியின் பெயர் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. ஐ.நா தீர்மானத்தில் அப்பாஸியின் பெயரை உட்படுத்தியவரை பின்தொடர்ந்தால் அவருடைய கொலைக்குப் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டுபிடிக்கலாம் என நஜாத் தெரிவித்துள்ளார்.

எங்களின் அணுசக்தி விஞ்ஞானிகளை துரத்திவிட்டு நாட்டின் முன்னேற்றத்தை தடுத்துவிடலாம் என அவர்கள் கருதுவார்களானால் அவர்கள் மீண்டும் ஒருமுறை தவறிழைத்துள்ளார்கள். அத்தகையதொரு தீர்மானத்தை கொண்டுவந்தவர்களை வைத்தே பதில் கூறவைப்போம்.

அமெரிக்க சியோனிஸ்டுகளுடன் இணைந்து பங்குதாரராக வியாபாரம் நடத்திவருவது தெளிவானதாகும். எதிரிகளுக்கு எப்படி பாடம் கற்றுக்கொடுக்கலாம் என்பதுக் குறித்து ஈரான் மக்களுக்கு தெரியும் என்பது வரலாறு நிரூபித்துள்ளது.

இரண்டு லட்சம் உயிர் தியாகிகளை அளித்த பிறகும் ஈரான் அதன் நிலைப்பாடுகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.' இவ்வாறு நஜாத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: